
அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை அதிரவைத்துக் கொண்டுள்ளனர் விவசாயிகள். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர். புராரி, காஜிபூர், திக்ரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் உத்தரபிரேதசம், பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தடைகளை உடைத்து விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி எல்லையில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில் டெல்லி போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். குரு நானக்கின் பிறந்தநாளுக்காக ஆன்லைனில் பேசிய ஜஸ்டின் டெல்லி போராட்டம் குறித்தும் பேசினார். அதில், இந்தியாவில் இருந்து விவசாயிகள் போராட்டம் குறித்து செய்திகள் வருகின்றன. நாங்கள் எல்லாம் குடும்பத்தினரை பற்றியும், நண்பர்களை பற்றியும் கவலை கொள்கிறோம். அது தான் உங்களது மனநிலையாகவும் இருக்கும். எங்களது கவலைகளை இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன், அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார். டெல்லி போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று மாலை 3 மணியளவில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஒருவேளை இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News