Type Here to Get Search Results !

ஆடிப்பூரத் திருவிழா: பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயில் தங்கத் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோயிலில் நடைபெற்ற திரு ஆடிப்பூரத் தேரோட்டத்தில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் பட்டர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஆடி மாதத்தில் நடக்கும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று பெரிய திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் கடந்த 7 ஆம் தேதி கருடசேவையும் 9 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.

image

கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆடிப்பூர விழா இன்று 9 ஆம் நாளை எட்டியுள்ளது. வழக்கமாக திருஆடிப்பூரத் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். தற்போது கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் வளாகத்திற்கு உள்ளே தங்கத்தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருள திருக்கோயில் பட்டர்கள்,மாவட்ட ஆட்சியாளர் மேகநாத ரெட்டி, அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டு 'கோவிந்தா கோபாலா' என கோஷம் எழுப்பி தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த ஆண்டும் இதேபோல் விதிமுறைகளை பின்பற்றி கோயிலுக்குள்ளே பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.