
அனைவரும் இணைந்து கடந்த ஆண்டு கொரோனாவை ஒழித்தது போன்று, தற்போதும் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க முழுதிறனையும் பயன்படுத்துமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம், சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. கூட்டத்துக்குப் பின், பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வரும் நிலையில், நாட்டின் முழுத்திறனையும் பயன்படுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை மே மாதத்தில் சுமார் 74 லட்சம் குப்பிகள் என அதிகரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவையை சமாளிக்க 1 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு தேவைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

PM CARES நிவாரண நிதியிலிருந்து 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் நிறுவப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டத்துக்குப் பின் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, அனைவரும் இணைந்து கடந்த ஆண்டு கொரோனாவை ஒழித்தது போன்று, தற்போதும் செயல்பட வேண்டும் எனவும், எனினும் இம்முறை அதிவேகமாகவும், ஒருங்கிணைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News