
போராட்டத்தின் வலிமையை மீண்டும் பறைசாற்றும் விதமாக டெல்லி விவசாயிகள் வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளனர். சக்கா ஜாம் என்றால் என்ன, அதற்காக விவசாயிகள் வகுத்துள்ள திட்டங்கள் என்னென்ன?
கடந்த மாதம் 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. அதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு, கைது, சாலைகளில் தடுப்பு, வாகனங்கள் வராமல் இருக்க ஆணிகள் பொருத்தியது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், எல்லைகளில் விவசாயிகள் அமைதியான முறையில் போராடத்தை தொடர்கின்றனர். இந்நிலையில் தங்கள் போராட்டத்தின் வலிமையை மீண்டும் பறைசாற்றும் விதமாக விவசாயிகள் வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சக்கா ஜாம் என்பது சக்கரங்களை நிறுத்துதல். அதாவது மற்ற வாகனங்களை ஓடச் செய்யாமல் செய்யும் சாலை மறியல் போராட்டம். அன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வர வேண்டும் என டெல்லியில் உள்ள விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சக்கா ஜாம் போராட்டம் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளதால் டெல்லி-உத்தரப்பிரதேசம் எல்லையான காசிப்பூர், டெல்லி-ஹரியானா எல்லையான டிக்ரி மற்றும் சிங்குவில் பாதுகாப்பை 3 மடங்காக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது டெல்லி காவல்துறை. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

சக்கா ஜாம் போராட்டத்தை முடிவு செய்தது மகாபஞ்சாயத்துகள் என்கிறது மத்திய அரசு. மகாபஞ்சாயத்துகள் என்பது பல நூறு கிராமத்தினர் ஓர் அணியாய் திரள்வது. இப்படி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடும் மகாபஞ்சாயத்துகள் அடுத்து நடைபெற உள்ள போராட்டங்களில் முக்கியப் பங்காற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குடியரசு தின டிராக்டர் பேரணிபோல இந்த முறை காசிப்பூர் எல்லையில் நடைபெறும் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசப்படவேண்டும் என்பதற்காக மகாபஞ்சாயத்துக்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். அதேநேரத்தில் குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறை போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க விவசாயிகள் ஒருபுறமும், காவல்துறையினர் மறுபுறமும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி எல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டாலும், போராட்டம் என்பது உயிர்ப்புடனே இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News