
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த 3 நாள்களுக்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க, வேடிக்கைப் பார்க்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, "நெல்லை மாவட்டத்திற்கு 3 குழுக்களைச் சார்ந்த பேரிடர் மீட்புப் பணியினர் 57 பேர் வந்துள்ளனர். அவர்கள் வரவழைக்கப்பட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மட்டும்தான். தேசிய பேரிடர் மீட்புப் பணியை தவிர்த்து, மாநில பேரிடர் மீட்பு படையினர் 60 பேரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். கடலோர கிராமங்களில் சார் ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு முகாமிட்டு தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, தாமிரபரணி நதியில் அடுத்த 3 நாள்களுக்கு பொதுமக்கள் குளிக்க, வேடிக்கைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மற்றும் போலீசார் தாமிரபரணி நதிக்கரையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக தாழ்வான பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிக கனமழை பெய்யும் பட்சத்தில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றுவதற்காக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

புயல் மழையால் மலை கிராமங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிகளை கண்காணிக்க உள்ளனர். நெல்லை மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் 13 நிவாரண முகாம்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. கடலோர கிராமங்களுக்கு என ஏழு சிறப்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளது. அதேபோல, அணைப் பகுதிகளில் தண்ணீர் குறைவாக உள்ளதன் காரணமாக ஆற்றுப்படுகையில் பெருவெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே புயல் மற்றும் அதிக கனமழை அறிவிப்பு விடப்பட்டுள்ளது கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்" என்றார்.
இதனிடையே, வங்கக் கடலில் உருவாகிள்ள புயலானது, டிச.4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News