
டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க பஞ்சாபி நடிகர், பாடகர் தில்ஜித் டோசன்ஜ் 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார், இது ‘பெரிய விஷயமில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபி நடிகர்-பாடகர் தில்ஜித் டோசன்ஜ் சனிக்கிழமை டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டார், மேலும் அவர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினார். அதனுடன் மட்டுமின்றி விவசாயிகளுக்கு குளிர்தாங்கும் ஆடைகளை வாங்க ரூபாய் 1 கோடி நன்கொடை அளித்துள்ளார்
சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளிடம் உரையாற்றிய அவர் “ விவசாயிகள் அனைவருக்கும் வணக்கம், நீங்கள் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளீர்கள். இந்த வரலாறு எதிர்கால சந்ததியினருக்கு விவரிக்கப்படும், விவசாயிகளின் பிரச்சினைகள் யாராலும் திசை திருப்பப்படக்கூடாது. ” என்று கூறினார்.
மேலும் "எங்களுக்கு மத்திய அரசிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது, தயவுசெய்து எங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும். எல்லோரும் இங்கு நிம்மதியாக அமர்ந்திருக்கிறார்கள், நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகள் இவர்களுடன் இருக்கிறார்கள். இந்த போராட்டம் விவசாயிகளைப் பற்றியது. ட்விட்டரில் விஷயங்கள் திரிக்கப்பட்டன, ஆனால் உண்மை என்னவென்றால், விவசாயிகள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், இங்கு யாரும் இரத்தக்களரி பற்றி பேசவில்லை. ” எனவும் கூறியுள்ளார்.

பஞ்சாபி பாடகர் சிங்கா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், தில்ஜித் இந்த நோக்கத்திற்காக ரூ .1 கோடியை நன்கொடையாக வழங்கியதாக வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கூறிய சிங்கா “நன்றி தம்பி, விவசாயிகளுக்கு, அவர்களின் குளிர்தாங்கும் ஆடைகளுக்காக ரூ .1 கோடி கொடுத்தீர்கள், யாருக்கும் தெரியாது. நீங்கள் இதைப் பற்றி இடுகையிடவில்லை. இப்போதெல்லாம் ரூ .10 நன்கொடை அளித்தவர்களால் கூட வாயை மூடிக்கொள்ள முடியாது. ” என கூறியுள்ளார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News