Type Here to Get Search Results !

தமிழகத்திலும் வலுக்கும் போராட்டம்: 'டெல்லி சலோ'-வுக்கு ஆதரவாக விவசாயிகள் தீவிரம்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ள நிலையில், இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள் மூலமாக விவசாயம் முழுமையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடிக்குள் செல்லும் என்றும், குறைந்தபட்ச ஆதாரவிலை என்பதே இல்லாமல் போகும் என்றும், படிப்படியாக அரசின் விவசாய விளைபொருள் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்றும் ஆரம்பம் முதலே விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

image

கடும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு இந்த மூன்று வேளாண் பண்ணைய சட்டங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது; இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மற்ற மாநிலங்களை விடவும் வீரியமான போராட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் செய்துவருகின்றனர். இவர்களின் 'டெல்லி சலோ' போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

மதுரையில் போராட்டம்:

டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து, மதுரை திருநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை திருநகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிஐடியு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், திருநகர் பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறையில் கைது:

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு வந்த கட்சியினர், மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

image

விருதுநகரில் 50 பேர் கைது:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி சாலையில் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் ஸ்டேட் வங்கி வரை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்தும், திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர், வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, அருப்புக்கோட்டை இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு 50-க்கும் மேற்பட்ட சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், போராடிய விவசாயிகளின் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சியில் நூதன போராட்டம்:

'வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்', 'நதிகளை இணைக்க வேண்டும்', 'விவசாய விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும்', 'விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்', 'மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும்', 'விவசாயிகளை இழிவுபடுத்தி அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புவோர்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்' போன்ற கோரிக்கைகள் அடங்கிய காகித ராக்கெட்டை திருச்சியில் இருந்து பிரதமர் மோடிக்கு விட்டு, பதில் வரும்வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

விவசாய சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் தனிமனித இடைவெளியுடன் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிவிரைவு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

image

கரூரில் சாலை மறியல்:

கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் மத்திய அரசை கண்டித்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய தொழிற்சங்க மையம் சார்பாக 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.