
ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக, சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக் கூடாது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனாலும் நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 90 ரன்கள் குவித்தார். இரு அணிகளுக்கு இடையே 2 ஆவது போட்டி நாளை நடைபெறுகிறது.
இந்தத் தோல்விக்கு பின் பேசிய விராட் கோலி "பயிற்சிக்கு எங்களுக்குப் போதிய நேரம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக, சரியாக விளையாடாதபோது காரணங்கள் சொல்லக் கூடாது. அதிகமாக டி20 விளையாடி வந்தோம். நீண்ட நாட்களுக்குப் பின் முழு ஒரு நாள் போட்டியில் ஆடியிருக்கிறோம். அப்படியிருந்தாலும் கூட நாங்கள் இதற்கு முன்னும் ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனுபவம் பெற்றவர்கள்தான். 25-26 ஓவர்களுக்குப் பின் அணி வீரர்களின் உடல் மொழி ஏமாற்றமளித்தது" என்றார்.

மேலும் "பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை எப்படி சில ஓவர்கள் வீச வைக்க முடியும் என்று பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்ட்யா இன்னும் அதற்குத் தயாராகவில்லை என்பதால் அந்தச் சூழலைப் புரிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்தவர்கள்தான் ஒவ்வொரு அணிக்குமே முக்கியம். அவர்கள் அணியில் ஸ்டாய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அதைச் செய்து வருகின்றனர். தொடர் விக்கெட்டுகளை எடுத்து அழுத்தம் தருகின்றனர். அது எங்களால் முடியாமல் போனது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் " பேட்டிங்கைப் பொறுத்தவரை அனைவருமே தீவிரத்துடன் ஆடினோம். அதனால்தான் அனைவராலும் பவுண்டரி, சிக்ஸர் என அடிக்க முடிந்தது. எந்தக் கட்டத்திலும் எங்களால் இலக்கை எட்ட முடியாது என்று நினைக்கவே இல்லை. ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அந்தத் தீவிரத்துக்கு ஒரு உதாரணம். ஆனால் முதல் 3 பேட்ஸ்மேன்கள் 130-140 ரன்களைச் சேர்க்க வேண்டும். அது நடக்கவில்லை. நல்ல முறையில் நேர்மறைச் சிந்தனையோடு ஆடத்தான் அனைவருமே வந்திருக்கிறோம். எனவே அதே சிந்தனையோடு முன்னேறி செல்வோம்" என்றார் கோலி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News